ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி

 

ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதால் சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. காலாவதியான, போலியான மருந்துகள் விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது. மருத்துவர்கள் அளிக்கும் மருந்து சீட்டில்லாமல் விதிமீறி மருந்துகள் விற்கப்படுகின்றன. எனவே இதனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

மனுவை கடந்த அக்டோபர் மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது எனவும், வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் வரைவு விதிமுறைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.