ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவுடையது?!: வெளியான பகீர் தகவல்!
ஆண்டிபட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அதிமுகவுடையது என்று அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அதிமுகவுடையது என்று அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடைபெறவுள்ளது.
இதனிடையே தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸில் ஈவிகேஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் ரவீந்திரநாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதே போல் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவின் சார்பில் ஜெயக்குமார், திமுக சார்பில் மகாராஜன் மற்றும் அதிமுக சார்பில் லோகிராஜன் போட்டியிடுகின்றனர். இதில் மகாராஜனும். லோகிராஜனும் அண்ணன் தம்பிகள் ஆவர்.
இந்நிலையில் ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடத்தப்படுவதாகப் புகார் வந்தது. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா எனச் சோதனை செய்ய காவல்துறையினர் அங்குச் சென்றபோது அமமுகவினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், அமமுக ஆதரவாளரின் கடையிலிருந்து கட்டுக்கட்டாக 1.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆண்டிபட்டி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார், ‘ நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால், அது எங்கள் பணம் என்று போலீசார் கூறுகின்றனர். அமமுகவினரிடம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் பணம் உண்மையில் அதிமுகவினருடையது’ என்றார்.
இருப்பினும் வாக்காளர்களுக்கு அமமுக சார்பில் 300 ரூபாய் வீதம் விநியோகிக்கப்பட்டதாகவும், அமமுக ஆதரவாளர் கடையில் வைத்துத்தான் பணப்பட்டுவாடா நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் வாசிக்க: தகாத உறவில் ஈடுபட்ட மனைவி: தலையை வெட்டி ஊர்வலம் எடுத்து சென்ற கணவன்: அதிர வைக்கும் வாக்குமூலம்!