ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று; இந்தியாவுக்கு 238 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று; இந்தியாவுக்கு 238 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில், பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 237 ரன்கள் எடுத்துள்ளது

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில், பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 237 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றின் முக்கிய ஆட்டமான இன்றைய போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, இமாம் உல் ஹக்கும், ஃபக்கர் சமானும் களமிறங்கினர். 7-வது ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் பேடில் பந்து பட, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. பின்னர் தேர்ட் அம்பயர் ரிவியூவிற்கு முடிவு சென்றது. இதையடுத்து, இமாம் அவுட் என உறுதி செய்யப்பட்டது. பத்து ரன்னில் இமாம் வெளியேறினார். 14.3-வது ஓவரில், சமான் 31 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். 16-வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

இதன்பின்னர், சீனியர் வீரர்களான சோயப் மாலிக்கும், சர்ப்ரஸ் அகமதுவும் நிதானமாக ஆடி 4-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் வீசிய 38.5-வது ஓவரில் 44 ரன்கள் எடுத்து சர்ப்ரஸ் அவுட்டானார். தொடர்ந்து, பும்ரா ஓவரில், சோயப் மாலிக் ஃபிளிக் செய்ய, அதை டைவ் அடித்து கேட்சாக்கினார் தல தோனி.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 237 ரன்கள் எடுத்து, இந்தியாவிற்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.