அழகிய கண்களுடைய பெண்களும்…அவர்கள் பாடுவதை கேட்க கூடிய மக்களுமாய்: வாழ்வாங்கு வாழ்ந்த பல்லவனேசுவரம் பாடல்பெற்ற தலங்கள்- 10
சீர்காழி,பூம்புகார் சாலையில்,பூம்பூகாருக்குள் நுழையும்போது கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலையின் இடது புரத்தில் கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் பல்லவநேசுவரர்,அம்மை செள்ந்தர நாயகி.
சீர்காழி,பூம்புகார் சாலையில்,பூம்பூகாருக்குள் நுழையும்போது கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலையின் இடது புரத்தில் கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் பல்லவநேசுவரர்,அம்மை செள்ந்தர நாயகி.ஐந்துநிலை ராஜகோபுரம் கொண்ட கோவில்.நான்கு சிவலிங்கத் திருமேனிகளும்,கைகூப்பிய நிலையில் பட்டினத்தார் சந்திதி ஆகியவை அமைந்துளன.
சம்பந்தர் இந்தத்தலத்தை பாடியுள்ள பாடல்களின்படி,இந்தக் கோவிலைச் சூழந்து வானளாவிய மாளிகைகளும்,பெரும் பொய்கைகளும், சோலைகளும், அழகிய கண்களுடைய பெண்களும்,அவர்கள் பாடுவதை கேட்க கூடிய மக்களுமாய் இருந்ததாம்.
வெளி மண்டபத்தின் வலதுபுறம் அம்பாள் சன்நிதி.அதற்கு நேரெதிராக இத்தலத்து இறைவனான சுயம்புலிங்க மூர்த்தி அருள் பாலிக்கிறார்.பெரிய பருத்த பாணத்துடன் கூடிய சிவலிங்கம்.அதன் வலதுபுறம் சிதம்பரத்தை நினைவூட்டும் சபாபதி சபை…இங்குள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்தபடி இருப்பது போல் வித்தியாசமாக அமைத்திருக்கிறார்கள்.
கோஷ்டத்தில் இரண்டு துர்கைகள் இருக்கிறார்கள்.சண்டிகேசுவரர் சன்நிதியிலும் இருவர் இருக்கின்றனர்.இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி ஆறு.வங்காள விரிகுடாவில் கலக்கிறது.இச்சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும்.
இது பட்டினத்தார் அவதரித்த தலம்.பட்டினத்தார் தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.அந்த ஆலய கோபுரத்தில் பட்டினத்தடிகள் மனைவி,தாய்,மகனாக வளர்ந்த இறைவன் திருவுருவச் சிலைகள் உள்ளன.
இங்கே சிவனுக்கு பிரமோற்சவம் கிடையாது.பட்டினத்தாருக்கு 12 நாள் திருவிழா எடுக்கப்படுகிறது.பத்தாவது நாளில் பட்டினத்தாருக்கு சிவன் மோட்சமளிக்கும் நிகழ்வு பெரிய அளவில் நடைபெறும்.
பழியற்ற நன்மக்கள் வாழ்ந்த புகாரும் அம்மக்கள் வணங்கி வந்த பல்லவனேசுவரரும் இன்று கவனிப்பார் அற்று,கால வெள்ளத்தின் மறு சுழற்சிக்காக காத்திருக்கிறார்கள்.