அரசு பேருந்து மோதி ஒருவர் பலி: போலீசார் தீவிர விசாரணை

 

அரசு பேருந்து மோதி ஒருவர் பலி: போலீசார் தீவிர விசாரணை

பண்ருட்டி அருகே அரசு பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கடலூர்: பண்ருட்டி அருகே அரசு பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சின்னபுறங்கனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 

இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பன்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவிலான விபத்துகள் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.