அரசியலில் களமிறங்கும் ரஜினி பட நாயகி: எதற்காக தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் என்று நடிகை சுமலதா தெரிவித்துள்ளார்.
மாண்டியா: நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் என்று நடிகை சுமலதா தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகில் பிரபல நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் அம்பரீஷ். தமிழ், இந்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த நவம்பர் மாதம் பெங்களூரில் மரணம் அடைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த அம்பரீஷ், மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட அவர் மனைவி சுமலதா விருப்பம் தெரிவித்துள்ளார்,
மாண்டியா காலபைரவேஸ்வரர் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்த சுமலதா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘என் கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மண்டியா மாவட்ட மக்கள் மீது அவருக்கு இருந்த அன்பு குறையாதது.அவரது அன்பை நான் நிறைவேற்ற விரும்புகிறேன். அம்பரீஷ், கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இதனால் நான் அந்தக் கட்சியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். வேறு தொகுதியிலோ, வேறு கட்சி சார்பிலோ போட்டியிடும் எண்ணமில்லை’ என்றார்.
சுமலதா தமிழில், திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.