அமித் ஷா சொல்றது பச்சை பொய்.. பரூக் அப்துல்லா பகீர் தகவல்

 

அமித் ஷா சொல்றது பச்சை பொய்.. பரூக் அப்துல்லா பகீர் தகவல்

தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கும் தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தற்போதைய ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான பரூக் அப்துல்லா கலந்து கொள்ளவில்லை.

தயாநிதி மாறன்

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பரூக் அப்துல்லா வராதது குறித்து கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா காணவில்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் அது குறித்து எங்களுக்கு தகவல் இல்லை. சபாநாயகர் என்பதால் உறுப்பினர்களை கட்டாயம் நீங்கள் பாதுகாக்க வேண்டும். நீங்கள் கட்டாயம் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் பேசினார்.

பரூக் அப்துல்லா

இதனையடுத்து அமித் ஷா பேசுகையில், பரூக் அப்துல்லா கைது செய்யபடவில்லை. வீட்டில்தான் இருக்கிறார். மேலும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் அவர் வீட்டில் உள்ளார் என கூறினார். ஆனால்  பரூக் அப்துல்லா  தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரூக் அப்துல்லா இது தொடர்பாக அளித்த பேட்டியில், நான் சொந்த விருப்பத்தில் வீட்டில் இருந்தேன் என்பது உண்மையல்ல. நான் வீட்டு காவலில் வைக்கப்பட்டேன். இந்திய உள்துறை அமைச்சர் இது போன்று பொய் பேசுவது எனக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினார்.