“அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்” : க. அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கம்!

 

“அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்” : க. அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கம்!

அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

மூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக  இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98. கடந்த 24 ஆம் தேதி   சென்னை  உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ttn

 அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது  இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

ttn

இந்நிலையில் பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ திராவிடச் சிங்கம் சாய்ந்து விட்டது. சங்கப்பலகை சரிந்து விட்டது. இனமான சமயம் உடைந்துவிட்டது. எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்.என்ன சொல்லி தேற்றுவது? எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை?

பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர்!  முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர்! எனது சிறகை நான் விரிக்க வனமாய் இருந்தவர்! என்ன சொல்லி என்னை நானே தேற்றிக்கொள்வது?

தலைவர் கலைஞர் அவர்களா என்னை வளர்த்தார்!  பேராசிரியர் பெருந்தகையோ என்னை வளர்பித்தார்!  எனக்கு உயிரும், உணர்வும் தந்தவர் கலைஞர்.  எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர். இந்த நான்கும்தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது.

“எனக்கு அக்காள் உண்டு. அண்ணன் இல்லை. பேராசிரியர்தான் என் அண்ணன்” என்றார் தலைவர் கலைஞர்!  எனக்கும் அத்தை உண்டு. பெரியப்பா இல்லை. பேராசிரியப் பெருந்தகயையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன். அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் சிரமம். ஆனால் நானோ பேராசிரியப் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டேன். அவரே என்னை முதலில், “ கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர்” என்று அறிவித்தார். எனக்கு வாழ்வின் பெருமையே எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைந்தது.

அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் சொல்வேன்?! பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்? இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!  

பேராசிரியப் பெருந்தகையே! நீங்கள் ஊட்டிய இனப்பால்-மொழிப்பால்-கழகப்பால் இம் முப்பால் இருக்கிறது.  அப்பால் வேறு என்ன வேண்டும்?!  உங்களது அறிவொளியில் எங்கள் பயணம் தொடரும் பேராசிரியப் பெருந்தகையே!  கண்ணீருடன் மு.க.ஸ்டாலின்”  என்று பதிவிட்டுள்ளார்.