அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிப்பது வரவேற்கத்தக்கது : துணை வேந்தர் சூரப்பா பேட்டி !
இரண்டாகப் பிரித்தால் இணைப்பு கல்லூரிகளை நிதி ரீதியாகக் கண்காணிக்க ஏதுவாக அமையும். ஆனால், அதனைச் செய்வதற்கு முன்னர் முன்னாள் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சீர்மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்க மத்திய அரசு, தமிழக அரசிடம் ஒப்புதல் கேட்டது.அதற்குத் தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமெனில் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பாதிக்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமான மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. அவ்வாறு உறுதி அளித்தால் அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி 5 அமைச்சர்கள் கொண்ட குழு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று அரசாணை வெளியிட்டது.
அந்த ஆலோசனைக் குழுவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை தங்க மணி, சட்டத்துறை அமைச்சர் ச.வி சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனைப் பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இது குறித்துப் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, ” அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்தால் இணைப்பு கல்லூரிகளை நிதி ரீதியாகக் கண்காணிக்க ஏதுவாக அமையும். ஆனால், அதனைச் செய்வதற்கு முன்னர் முன்னாள் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் அதில் ஏற்படும் நிதி நெருக்கடிக்குத் தமிழக அரசு உதவும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.