அண்ணாமலை பல்கலைக்கழக ஊழல்; சிபிஐ விசாரணை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழல்; சிபிஐ விசாரணை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-11ஆம் ஆண்டுகளில் நடந்த ஊழல்கள்  தொடர்பாக அப்போதைய துணைவேந்தர் இராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பல்கலைக் கழக சீரழிவுக்கு காரணமானவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

அதேநேரத்தில் பல்கலைக்கழக ஊழலுக்கு 2011-ஆம் ஆண்டுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை; பல்கலைக்கழக நிர்வாகம் புனிதமடைந்து விடவில்லை என்பதையும் கையூட்டுத் தடுப்புப் பிரிவு அறிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தி, அதை அரசுடைமையாக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியதைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டில்  பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றுக் கொண்டது. அதன்பின்னர் தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட போது தான் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2015-ஆம் ஆண்டில்  பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் சி.மணியன் நியமிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஊழல்கள்  தலைவிரித்தாடியதாகவும், அப்போதைய பதிவாளர் முனைவர் ஆறுமுகம், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்  முனைவர் சந்திரசேகரன் ஆகியோர் இந்த ஊழலுக்கு துணை நின்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணினி புரோகிராமர்களாக பணியாற்றி வந்த 189 பேரும், ஆசிரியர் அல்லாத பணியில் இருந்த 30 பேரும், 2016ஆம் ஆண்டு பேராசிரியர்களாக மாற்றப்பட்டனர். அவர்களிடமிருந்து  தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10.95 கோடி கையூட்டாக பெறப்பட்டுள்ளது; பல்கலைக் கழகத்தின் சார்பில் தொலைதூர கல்வி இயக்கத்திற்கான புத்தகங்கள் அச்சிடுதல், பொருட்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 30% கையூட்டு  பெறப்பட்டது; தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்து, அதை ரத்து செய்வதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் லட்சக்கணக்கில் கையூட்டு பெறப்பட்டுள்ளது; தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடந்த ஊழல்கள் காரணமாக அதன் ஆண்டு வருமானம்  ரூ.210 கோடியிலிருந்து 2017-ஆம் ஆண்டில் ரூ.80 கோடியாக குறைந்து விட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசிடம் கடந்த காலங்களில் புகார் செய்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மருத்துவக் கல்வியை தரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்து வந்த மாணவர்கள் 150 பேரிடம் தலா ரூ.25 லட்சம் வீதம் கையூட்டு பெறப்பட்டு அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.37.5 கோடி கையூட்டாக பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு கருவிகளை வாங்குவதற்காக அப்போதைய துணை வேந்தர் மணியனின் மகனுக்கு நெருக்கமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த ஆவணங்களை கடலூர் கையூட்டுத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் சில ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்த போதிலும் மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பல்கலைக்கழகத்தின் உபரி பணியாளர்கள், பேராசிரியர்களை அவர்களுக்கு விருப்பமான இடத்துக்கு மாற்றுவதற்கு கையூட்டு, பல்கலைக் கழகத்திற்கு முதல்வர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், துணைத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துறைத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஊழல், பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் 3 உணவகங்களுக்கான ஒப்பந்த வழங்குவதில் ஊழல், நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கியதிலும், கண்காணிப்பு காமிராக்களை வாங்கியதிலும் ஊழல் என முந்தைய துணைவேந்தர் மணியன் மீதான ஊழல் பட்டியல் வரிசை நீள்வதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களே குற்றம்சாட்டியிருக்கின்றன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழல் புற்றுநோயாய் ஊடுருவியுள்ள நிலையில், குறிப்பிட்ட  காலம் வரையிலான ஊழல்கள் குறித்து மட்டும் விசாரணை நடத்துவது நிர்வாகத்தை தூய்மைப்படுத்த உதவாது. மாறாக, மேலும் துணிச்சலுடன் ஊழல் செய்யவே வழி வகுக்கும். எனவே, சில மாதங்களுக்கு முன்பு வரை துணைவேந்தராக பதவி வகித்த மணியன் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்த ஊழல்களில் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதால் விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. ஆகவே, அண்ணாமலை பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.