அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கைது

 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கைது

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டார்

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது ஆட்சி காலத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அதேபோல், இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதனிடையே, இன்டர்போல் நோட்டீசின் அடிப்படையில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தார்.

அதேசமயம், கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிமன்றம், கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில், கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்பட்டார். ரா, சிபிஐ, வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடன் துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்ட அவர், சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரை, சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலின் வழிகாட்டுதல் படி, கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.