குடும்ப தராறில், அண்ணியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது!
கோவை
கோவை அருகே குடும்ப தகராறில் அண்ணி மீது பெட்ரோலை ஊற்றி எரித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல் (34). பெயிண்டிங் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு செலவுக்கு பணம் தராததால் தந்தை கிருஷ்ணனை அடித்து கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்த குமாரவேல், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், குமரவேலின் தந்தை பெயரில் பெற்ற கேஸ் சிலிண்டரை, அதே பகுதியில் வசிக்கும் அவரது அண்ணன் சக்திவேல் பயன்படுத்தி வந்துள்ளார். அதனை தனக்கு வழங்கும் படி குமாரவேல் கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இதுகுறித்து பேசுவதற்காக சக்திவேலின் வீட்டிற்கு அவர் சென்றார்.
அப்போது, கேஸ் சிலிண்டரை கொடுப்பது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், சக்திவேலின் மனைவி சிந்து, குமாரவேலை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர், தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து சிந்துவின் மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில், உடல் முழுவதும் தீ பரவியதால் சிந்து பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை சக்திவேல் மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிந்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரவேலை கைதுசெய்தனர்.