முன்விரோதம் காரணமாக இளைஞர் தலை துண்டித்து படுகொலை!

 

முன்விரோதம் காரணமாக இளைஞர் தலை துண்டித்து படுகொலை!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த கல்கிணற்றுவலசை பகுதியை சேர்ந்த ராமு மகன் தேவா (24). கூலி தொழிலாளி. தேவாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு தேவா நம்பியான் வலசை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் தலை துண்டித்து படுகொலை!

அப்போது, தேவாவை திடீரென வழிமறித்த மர்மநபர்கள், அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். மேலும், ஆத்திரம் தாங்காத அந்த கும்பல் தேவாவின் தலையை துண்டித்து, அருகேயுள்ள புதுமடம் விலக்கு பகுதியில் சாலையில் வீசிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீசார் தேவா உடல் மற்றும் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக கணேசமூர்த்தி, தினேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இளைஞர் படுகொலை காரணமாக, கல்கிணற்றுவலசை பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.