திருச்சியில் ஜாமினில் வெளிவந்த இளைஞர் வெட்டி படுகொலை!

 

திருச்சியில் ஜாமினில் வெளிவந்த இளைஞர் வெட்டி படுகொலை!

திருச்சி

திருச்சியில் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த இளைஞர் பழிக்கு பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்தவர் விஜய். பிரபல ரவுடியான இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கைதான கிசாந்த் (23) என்பவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.

திருச்சியில் ஜாமினில் வெளிவந்த இளைஞர் வெட்டி படுகொலை!

நேற்று காலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே அமைந்துள்ள மாநகராட்சி கழிவறைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கும்பல், கிசாந்தை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரவுடி விஜய் கொலைக்கு பழிக்கு பழியாக கிசாந்த் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.