வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவம்; காவலர் பணியிடை நீக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் சந்திரசேகர் என்பவர் அவ்வழியாக வந்த ஆம்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முகிலன் என்பவரை தடுத்து நிறுத்தி வாகனத்தை பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முகிலன் வீட்டில் சென்று வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் கேனை கொண்டுவந்து வாகன சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் காவலர்கள் முன்னிலையில் தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் வேலூர் தனியார்மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் ஆம்பூரில் முழு ஊரடங்கின்போது வாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர் சந்திரசேகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.