குமரி அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் இணயம் ஹெலன் நகரை சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மகன் சுஜின்ராஜ் (21). இவர் நேற்று மதியம் நண்பர்களுடன் கீழ்குளம் உசரத்துவிளை பகுதியில் உள்ள பாறைகுண்டு குளத்திற்கு குளிப்பதற்காக சென்றார். குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்ட சுஜின்ராஜ், நீரில் மூழ்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், அந்த பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து மாயமான சுஜினை தேடினர். சுமார் அரை நேர தேடலுக்கு பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த சுஜின்ராஜை மீட்ட அவர்கள், சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சுஜின்ராஜுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த புதுக்கடை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.