இருசக்கர வாகன விபத்தில் புதுமாப்பிள்ளை பலி!

 

இருசக்கர வாகன விபத்தில் புதுமாப்பிள்ளை பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் அருள் கிங்ஸ்டன். இவரது மகன் லிவிங்ஸ்டன்(21). இவருக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் லிவிங்ஸ்டன் தனது இருசக்கர வாகனத்தில் ஞானம் ஆற்றங்கரை வழியாக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் புதுமாப்பிள்ளை பலி!

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சுமார் அரை மணிநேரம் உயிருக்கு போராடி உள்ளார். பின்னர், அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லிவிங்ஸ்டன் உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.