நெல்லை அருகே ஜாமினில் வந்த இளைஞர் அடித்துக்கொலை… சகோதரர் கவலைக்கிடம்!

 

நெல்லை அருகே ஜாமினில் வந்த இளைஞர் அடித்துக்கொலை… சகோதரர் கவலைக்கிடம்!

நெல்லை

நெல்லை அருகே கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அடுத்த செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன்கள் விகாஸ் (27), விஜய் (25). இவர்கள், கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வந்தனர். சமீபத்தில் 2 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற ரவிச்சந்திரன் மகன் சிவபிரவீன் (22), அவரது உறவினர் ஜெயமுருகன் (37) ஆகியோரை விகாசும், விஜயும் பின்தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிவபிரவீன், ஜெயமுருகன் ஆகியோர் செங்குளத்திற்கு திரும்பி, கிராமத்தினரிடம் முறையீடு செய்துள்ளனர்.

நெல்லை அருகே ஜாமினில் வந்த இளைஞர் அடித்துக்கொலை… சகோதரர் கவலைக்கிடம்!

அப்போது, அங்கு வந்த விகாஸ், விஜயை கிராமத்தினர் கண்டித்ததால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கற்களாலும், கட்டைகளாலும் விகாஸ் மற்றும் விஜயை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விகாஸ் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

தகவல் அறிந்த சேரன்மாதேவி டிஎஸ்பி பார்த்திபன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விகாசை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு விகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.