10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை – இளைஞர் போக்சோவில் கைது!
சேலம்
ஆத்தூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பைத்தூர் பகுதியை சேர்ந்தவர் 10 ஆம் வகுப்பு மாணவி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சிறுமியை கண்டுபிடித்து தரக் கோரி, அவரது பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமி கடம்பூர் பகுதியை சேர்ந்த ராமர் என்பவருடன் பழகி வந்ததும், பெண் கேட்டுசென்றபோது பெற்றோர் தர மறுத்ததால் சிறுமியை கடத்திச்சென்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, கடம்பூரில் பதுங்கி இருந்த சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராமர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனர்.