பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

 

பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!


ஈரோடு

ஈரோடு அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர், இதுகுறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்தனர்.

பிளஸ் 2 மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

அதன் பேரில், நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவியை கோபி அடுத்த வெள்ளாள பாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் என்கிற பிரதீப்குமார் (27) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று, திருமணம் செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில், நம்பியூர் அருகே மொட்டணம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மாணவியை கடத்தி சென்ற பிரதீப்குமார் என தெரிய வந்தது.

இதைடுத்து, அவருடன் இருந்த பிளஸ் 2 மாணவியை போலீசார் மீட்டனர். தொடர்ந்து, நம்பியூர் போலீசார், குழந்தை திருமண சட்டம், போக்சோ சட்டம் ஆகிய பிரிவின் கீழ் பிரதீப்குமாரை கைது செய்தனர். பின்னர், அவர் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.