பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு : இளைஞர் சரமாரியாக குத்திக் கொலை!
குடியாத்தம் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சாமரிஷிகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் ஹேமந்த்(21). இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அச்சமயம் அங்கு வந்த ரீகன், ராபின், சின்னா ஆகியோர், ஹேமந்த்தின் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹேமந்தின் நண்பர்களுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ரீகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித் (25) என்ற இளைஞரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அஜித், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அஜித் உடன் இருந்த அவரது சித்தப்பா வேலுவையும், அஜித்தின் நண்பர் சரவணனையும் அந்த 3 பேர் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அஜித்தின் உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த போலீசார், அஜித்தை கொலை செய்த ரீகன், ராபின் மற்றும் சின்னாவை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.