குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் பலி!

 

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் பலி!

அரியலூர்

அரியலூர் அருகே குடும்ப தகராறில் இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்துள்ள பூவந்திகொள்ளை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவர், அதே பகுதியில் செல்போன் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (29) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த மகேஷ்வரி, திடீரென அறையை தாழிட்டுக் கொண்டு குழந்தைகளை அணைத்தபடி தீவைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றியதால் மூவரும், அலறி துடிக்கவே அக்கம் பக்கத்தினர் சென்று அவர்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில், மகேஷ்வரி உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் பலி!

அவர்களை உடனடியாக மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தா.பழூர் போலீசார், மகேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மகேஷ்வரியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதினிடையே திருமாணமாகி 5 ஆண்டுகளுக்குள் மகேஷ்வரி உயிரிழந்ததால் இதுகுறித்து, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.