கள்ளக்காதல் விவகாரத்தில் பனியன் நிறுவன ஊழியர் படுகொலை!

 

கள்ளக்காதல் விவகாரத்தில் பனியன் நிறுவன ஊழியர் படுகொலை!

திருப்பூர்

திருப்பூரில் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பனியன் நிறுவன ஊழியரை கொன்று, உடலை எரித்த இளைஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைதுசெய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் தங்கி, அங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் பணிபுரியும், திருமணமாகி மகனுடன் வசித்து வரும் மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனால் சந்தோஷ்குமாரிடம், மகேஸ்வரி அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி சந்தோஷ்குமாரின் வீட்டிற்கு சென்ற மகேஸ்வரியின் மகன் ஆரோக்கியராஜ் , அவரது நண்பர் பாலசுப்பிரமணி ஆகியோர், அவரிடம் பேச வேண்டுமென வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு, சந்தோஷ்குமார் மாயமாகி உள்ளார். அவரது உறவினர்கள் திருப்பூரில் அவரது வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது கடைசியாக ஆரோக்கியராஜ் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

கள்ளக்காதல் விவகாரத்தில் பனியன் நிறுவன ஊழியர் படுகொலை!

இதுகுறித்து சந்தோஷ்குமாரின் பெற்றோர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் ஆரோக்கியராஜ், பாலசுப்பிரமணியனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்தோஷ்குமார் தனது தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தனக்கு பிடிக்காததாலும், பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாலும் சந்தோஷ்குமாரை அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவித்தனர்.

மேலும், உடலை கல்லாங்காடு பாறைக்குழியில் வைத்து எரித்ததாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து, அங்கு சென்ற போலீசார் எரிந்த நிலையில் கிடந்த சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் ஆரோக்கியராஜ், பாலசுப்ரமணியனை கைதுசெய்தனர்.