நிலத்தகராறில் வாலிபர் அடித்துக்கொலை: உறவினர்கள் வெறிச்செயல்!
நிலத்தராறில் சித்தப்பா மகனையே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜமுனாமத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜமுனாமத்தூர் அருகில் உள்ள நிம்மியம்பட்டு ஊராட்சி மேல்குப்சணாவூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரனுக்கும் (வயது 40), அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் (50) மற்றும் அவரது மகன் அண்ணாமலை (32) ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளையனின் சித்தப்பா மகன் தான் ராஜேந்திரன்.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் நிலப்பிரச்சினை தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளையனும், அண்ணாமலையும் சேர்ந்து ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நிம்மியம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜமுனாமத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் போளூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையன் மற்றும் அவரது மகன் அண்ணாமலை ஆகியோரை கைது செய்தனர்.