இரவில் நண்பனை கொல்ல வந்த இளைஞர்… ஆள்மாறாட்டத்தால் முதியவர் கொலை!- போதையால் நடந்த விபரீதம்

 

இரவில் நண்பனை கொல்ல வந்த இளைஞர்… ஆள்மாறாட்டத்தால் முதியவர் கொலை!- போதையால் நடந்த விபரீதம்

குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொல்ல வந்த இளைஞர், முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.

கொரோனாவால் தமிழகத்தில் 40 நாட்களுக்கு மேல் டாஸ்மாக் திறக்கப்படவில்லை. இதனால், குற்றங்கள், கொலைகள் குறைந்துவிட்டதாக காவல்துறை புள்ளி விவரங்களுடன் தகவலை வெளியிட்டது. இந்த நற்செய்தி வந்த சில வாரங்களிலேயே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. திறந்த முதல் நாளிலேயே 15 பேர் உயிரிழந்ததாக மற்றொரு புள்ளிவிவரம் வெளியானது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. ஆனால், அரசு டாஸ்மாக் கடைகளை மூடவில்லை. இதனால் பல உயிரிழப்புகள் நடந்து வருகிறது. இதனிடையே, போதையில் நண்பனை அடித்துக்கொன்ற சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேட்டை சேர்ந்த கணேஷூம் (30), ஜெகனும் (30) நண்பர்கள். சம்பவத்தன்று இரவு இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். போதை அளவுக்கு மீறியதால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நண்பன் ஜெகனை கடுமையாக தாக்கிவிட்டு கணேஷ் எஸ்கேப் ஆகிவிட்டார். பின்னர் தினந்தோறும் படுத்து உறங்கும் நியாயவிலை கடை அருகில் உள்ள இடத்துக்கு கணேஷ் வந்துள்ளார். ஆனால் அங்கு படுக்காமல் அருகில் உள்ள தேவாலயத்தில் படுத்துள்ளார் ஜெகன். போதையில் இருந்த கணேஷூக்கு இது தெரியவில்லை.

குடிபோதையில் இருந்த கணேஷ், ஜெகன் என நினைத்து நியாயவிலைக்கடை அருகில் போர்வை போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்த முதியவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அலறிய நபர் ஜெகன் அல்ல, அதே ஊரை சேர்ந்த எட்டியப்பன் (70) என்று தெரிந்ததும் கணேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த எட்டியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த கணேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நண்பனை கொல்ல வந்த நபர், ஆள்மாறாட்டத்தால் முதியவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.