‘கொக்கைன் சப்ளை’ கையும் களவுமாக சிக்கிய பியூட்டி பார்லர் பெண்!
மும்பையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் தொடர்ச்சியாக போதைப்பொருள் கடத்தல் புகார்கள் எழுந்து வந்ததால், அந்த கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அதன் மூலம் தற்போது 10க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில், பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்த 24 வயதான இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் மும்பை வந்த மஞ்சுஷா சிங் என்னும் அந்த பெண், கோவந்தி பகுதியில் இருந்த பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு பணச் சிக்கல் ஏற்பட்டதால், போதைப்பொருள் கடத்தல் செய்யும் நபர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அந்த நபரின் வழிகாட்டுதலின் பேரில் இவர் கொக்கைன் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். மஞ்சுஷா கொக்கைன் சப்ளை செய்ததாக கடந்த வெள்ளிக்கிழமை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், அந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரிடம் இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 109 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு அதனை பற்றி ஏதும் தெரியாது என்றும் அந்த நபர் சொல்லும் இடத்தில் தான் கொக்கைனை கொடுத்தால் தனக்கு பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மஞ்சுஷா கொடுத்த தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.