காஞ்சிபுரம்: காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவிய யோகா!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிச் சுமையால் அவதியுறும் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர்.
கொரோனா நோய்ப் பரவலுக்குப் பிறகு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவாவது குறைந்துவிட்டது. ஆனால், சாலையில் ஆங்காங்கே நின்று கொண்டு தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்களை நிறுத்தி ஊரடங்கு முறையாக நடக்க காவலர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். இதனால் ஏராளமான காவலர்களுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளும் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 போலீசாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் காவலர்கள் மத்தியில் உள்ள மனச்சோர்வை போக்க அவர்களுக்கு தியானம், யோகா பயிற்சி வழங்க காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர் உட்கோட்டங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு இன்று யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சி மன அமைதியைத் தருவதாக பல காவலர்கள் கூறினர். தொடர்ந்து வீட்டில் யோகா செய்யும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.