சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 1940 இல் பிறந்தவர் கந்தசாமி. இவர் 1968 இல் எழுதிய சாயாவனம் என்ற நாவல் அவருக்கான தனி அடையாளத்தை எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. மேலும் இந்த நாவல் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இவரின் தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய ஆய்வினை சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் இன்னும் இருபது நிமிட ஆவணப்படமாக எடுத்து தயாரித்தது. 1998 ஆம் ஆண்டு எழுத்தாளர் கந்தசாமி விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதை பெற்றார். மேலும் இவரின் நிகழ் காலத்திற்கு முன்பு எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இதயப் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த சா கந்தசாமி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு சென்னை பெசன்ட்நகரில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது. அவரின் மறைவிற்கு கலைத் துறையினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சாகித்ய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்த இவர் இந்தியத் திரைப்படத்துறையில் தணிக்கை குழுவிடம் 10 ஆண்டுகளாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது