அன்னத்தை வழங்கும் கடவுளுக்கு நன்றி கூறும் அன்னாபிஷேகம்!

 

அன்னத்தை வழங்கும் கடவுளுக்கு நன்றி கூறும் அன்னாபிஷேகம்!

உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் கடவுளுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. சிவாலயங்களில் உள்ள லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்வதால், சிவபெருமானின் அருளும், அன்னபூரணியான பார்வதி தேவியின் அருளும் ஒன்றாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

அன்னத்தை வழங்கும் கடவுளுக்கு நன்றி கூறும் அன்னாபிஷேகம்!

தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிஷேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடம் வருகின்ற சனிக்கிழமை (அக்.31) நடைபெறுகிறது. சமைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து காய்கறிகள், பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுவர்.

அன்னாபிஷேக நாளில் சிவன் கோயிலுக்கு தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களுக்கு உணவு பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை.

அன்னத்தை வழங்கும் கடவுளுக்கு நன்றி கூறும் அன்னாபிஷேகம்!

வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்படும். இதனால், ஒரே சமயத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது சிவனடியார்களின் நம்பிக்கை. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது. ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.

அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது. அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.

அன்னத்தை வழங்கும் கடவுளுக்கு நன்றி கூறும் அன்னாபிஷேகம்!


எல்லா சிவாலயங்களிலும் இந்த அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் உலகப் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி கொள்வோம். இந்த அன்னாபிஷேகத்தைப் பார்க்க உலகம் முழுவதுமுள்ள சிவனாடியார்கள் வருகை புரிவர். ஓம் நமசிவாய!

-வித்யா ராஜா