‘கணினிக்குள் மாணவர்களை அமிழ்த்திக்கொண்டிருக்கிறோம்’ கமல்ஹாசன்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினம் இன்று. இன்றுவரை மிகச் சிறந்த முதல்வராகவும் பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நேர்மைக்கு உதாரணமாகவும் எல்லோராலும் கொண்டாடப்படுபவர் காமராஜர். அவரின் பிறந்த தினத்தில் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அவரின் சிலைக்கு மலை அணித்துவித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கியிருந்தால் பெரிய அளவில் காமராஜர் பிறந்த தினத்தைக் கொண்டாடியிருப்பார்.
காமராஜரின் புகழைச் சொல்லும் விதமாக ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிந்துள்ளார்.
அதில், ‘ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல்,தனக்கான பொறுப்பாக பார்த்தவர். மக்களின் தேவைகளையும், வலிகளையும் அறிந்து செயலாற்றுவதே முக்கியம் என நடைமுறையில் செயல்படுத்தியவர் கர்மவீரர் நம் காமராஜர். அவர்தம் பிறந்த நாளில் இன்று போல் என்றும் மக்கள் நலனை முதன்மையாய் வைத்திடுவோம் என உறுதியேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல்,தனக்கான பொறுப்பாக பார்த்தவர்.
மக்களின் தேவைகளையும், வலிகளையும் அறிந்து செயலாற்றுவதே முக்கியம் என நடைமுறையில் செயல்படுத்தியவர் கர்மவீரர் நம் காமராஜர்.
அவர்தம் பிறந்த நாளில் இன்று போல் என்றும் மக்கள் நலனை முதன்மையாய் வைத்திடுவோம் என உறுதியேற்போம்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2020
இன்று உலக இளைஞர் திறன் தினம். எனவே அதையொட்டியும் கமல்ஹாசன் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “நம்மை மேம்படுத்திடவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம். இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம். திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதைவிடச் சிறந்த நேரமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
நம்மை மேம்படுத்திடவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம்.
திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதைவிட சிறந்த நேரமில்லை.
— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2020
தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கொடுக்கப்படும் சூழலிலும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பித்தலைத் தொடங்கியிருக்கும் சூழலில் கமல்ஹாசன் இந்தப் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.