கல் குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி!

 

கல் குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி!

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிக்கனி (33). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாரிக்கனி நண்பர்களுடன் மொட்டமலை பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார். குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாரிக்கனிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

கல் குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் குட்டையில் தீவிரமாக தேடியும் மாரிக்கனியை மீட்க முடியவில்லை. இதனை அடுத்து, அவர்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கல்குவாரி குட்டையில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேர தேடலுக்கு பின், அவர்கள் மாரிக்கனியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

பின்னர், வன்னியம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில்வ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.