இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!
தேனி
தேனி அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண், வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமண குமார். இவருக்கு திருமணமாகி வினிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீரபாண்டியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு லட்சுமண குமார், மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.
போடி அடுத்த விசுவாசபுரம் பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் லட்சுமணகுமார் திடீரென பிரேக் போட்டார். இதில், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த வினிதா சாலையில் விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார். குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தாவர்கள் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு வினிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில் போடி தாலுகா போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.