வட்டிகேட்டு தொல்லை கொடுத்த பெண் கடத்தி கொலை – ஒருவர் கைது
கோவை
கோவையில் வட்டி கேட்டு தொல்லை செய்த பெண்ணை கடத்தி கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை நரசிபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவர், தனது தாயார் சுப்புலட்சுமியை காணவில்லை என ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுப்புலெட்சுமியின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடைசியாக அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது. இந்த நிலையில் வீராசாமி மாயமானதால் அவரை தேடி வந்த போலீசார், கரூரில் பதுங்கி இருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், சுப்புலட்சுமியிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருந்ததும், அதனை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதற்காக கடந்த 8ஆம் தேதி வட்டிபணம் வாங்க வீட்டிற்கு வருமாறு செல்போனில் வீராசாமி அழைத்துஎஉள்ளார். இதனை நம்பி சென்ற சுப்புலட்சுமியிடம், அவர் ரத்த அழுத்தம் குறைவதற்கான மாத்திரை என கூறி தூக்க மாத்திரைகளை வழங்கியுள்ளார்.
அதனை நம்பி சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில், சுப்புலட்சுமியை காரில் ஏற்றிச் சென்று பொள்ளாச்சி பிஏபி கால்வாய் பகுதியில் வைத்து கழுத்தை நெரித்தும், இரும்பு கம்பியால் அடித்தும் கொலை செய்ய முன்றுள்ளார். பின்னர், அவர் இறந்ததாக கருதி அவரது கழுத்தில் இருந்த 6.5 சவரன் நகைகளை பறித்துவிட்டு, உடலை கால்வாயில் வீசி விட்டு கரூருக்கு சென்றுள்ளார்.
மறுநாள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சுப்புலெட்சுமியை, அந்த பகுதிமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சடலத்தை மீட்ட ஆலந்துறை போலீசார், கொலையாளி வீராசாமியை கைதுசெய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.