போதை… தகராறு… பெண் கொலை!- திருச்சியில் நடந்த பயங்கரம்

 

போதை… தகராறு… பெண் கொலை!- திருச்சியில் நடந்த பயங்கரம்

திருச்சியில் இருவருக்கும் இடையே நடந்த சண்டையை விலக்கி விடச்சென்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி தில்லைநகரை சேர்ந்த மாரிமுத்து, தங்கபாண்டி ஆகியோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றும் இதேபோல் போதையில் இவருக்கும் சண்டை நடந்துள்ளது. அப்போது, தங்கப்பாண்டியின் சகோதரர் சுரேஷ், அவரது மனைவி அஞ்சலி மற்றும் மாரிமுத்துவின் சித்தி முத்துலட்சுமி ஆகியோர் இந்த தகராறை தடுக்க முயன்றனர். அப்போது, முத்துலட்சுமிக்கு அடி விழுந்ததோடு, அவரை மாரிமுத்துவும், தங்கபாண்டியும் தள்ளிவிட்டுள்ளனர். இதில் நிலைதடுமாறிய முத்துலட்சுமி அருகிலிருந்த சிமெண்ட் கடையில் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமியை அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் முத்துலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக தில்லைநகர் காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தங்கப்பாண்டி உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.