கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி!
நீலகிரி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டுயானை தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா அட்டி, வாளவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 2 காட்டுயானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு வாளவயல் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் பூங்கொடி என்பவர், கழிவறைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த காட்டுயானைகள் திடீரென பூங்கொடியை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, கூடலூர் வனக்கோட்ட அலுவலருக்கு தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.