தகராறில் தீக்குளித்த கணவன்… காப்பாற்ற முயன்ற மனைவி, மகன், மகள்… பறிபோன உயிர்கள்!- போதையில் நடந்த விபரீதம்

 

தகராறில் தீக்குளித்த கணவன்… காப்பாற்ற முயன்ற மனைவி, மகன், மகள்… பறிபோன உயிர்கள்!- போதையில் நடந்த விபரீதம்

குடிபோதையில் தனக்குத்தானே உடலில் தீ வைத்துக் கொண்ட கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி, மகன் ஆகியோர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் உசிலம்பட்டியில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் மனைவி கனி. இந்த தம்பதிக்கு கவின் என்ற மகனும், தர்ஷிணி என்ற மகளும் உள்ளனர். லாரி உரிமையாளரான ஜெயராமனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. தினமும் மதுபோதையுடன் வீட்டிற்கு வரும் ஜெயராமன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் மதுபோதையுடன் வீட்டுக்கு வந்த ஜெயராமனுக்கும், மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, திடீரென ஜெயராமன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி, ஜெயராமனைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது, கனி உடலில் தீ பற்றியது. அதை பார்த்த மகனும், மகளும், தங்கள் கண்முன்னே தாய் தீயில் கருகுவதைப் பார்த்து காப்பாற்ற முயன்றனர். அவர்கள் மீதும் தீ பற்றியது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே சிகிச்சை பலனின்றி, கனி பரிதாபமாக உயிரிழந்தார். அதிகளவு தீ காயங்களுடன் ஜெயராமன், மகன் கவின் ஆகியோர் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கவினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீ காயம் சிறிதளவே ஏற்பட்டதால் தர்ஷிணி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேடபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.