‘கணவர் மரணத்தில் சந்தேகம்’ சடலத்துடன் மனைவி போராட்டம்: பரபரப்பு சம்பவம்!

 

‘கணவர் மரணத்தில் சந்தேகம்’ சடலத்துடன் மனைவி போராட்டம்: பரபரப்பு சம்பவம்!

திருப்பத்தூர் அருகே கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெண் தனது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் அருகே குஸ்தம்பள்ளி பகுதியில் வசித்து வந்த தம்பதி வெங்கடேசன்(50) – அஞ்சலி. இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். டீக்கடை நடத்தி வந்த வெங்கடேசன், அதில் ஈட்டும் வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். திம்மனமுத்தூர் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் தனது வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம் என்று கூறி அவரை கடந்த 14ம் தேதி விஜயவாடா அழைத்து சென்றிருக்கிறார்.

‘கணவர் மரணத்தில் சந்தேகம்’ சடலத்துடன் மனைவி போராட்டம்: பரபரப்பு சம்பவம்!

வெளி மாநிலத்துக்கு அழைத்துச் சென்று, தனக்கு உணவு ஏதும் கொடுக்காமல் கொடுமை படுத்தியதாக அஞ்சலியிடம் வெங்கடேசன் செல்போனில் கதறியிருக்கிறார். பதற்றம் அடைந்த அஞ்சலி, கடந்த 31ம் தேதி விஜயவாடாவுக்கே சென்று வெங்கடேசனை திருப்பத்தூர் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததில் இருந்தே வெங்கடேசன் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை வெங்கடேசன் திடீரென உயிரிழந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, தனது கணவன் வெங்கடேசனின் சடலத்துடன் புருஷோத்தமனின் வீட்டுக்கு முன்பு கணவனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அஞ்சலி புருஷோத்தமன் தனது கணவனை அழைத்துச் சென்று கொடுமை படுத்தியதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.