மனைவி தீக்குளித்து தற்கொலை… காப்பற்ற முயன்ற கணவரும் பலியான சோகம்!

 

மனைவி தீக்குளித்து தற்கொலை… காப்பற்ற முயன்ற கணவரும் பலியான சோகம்!

விழுப்புரம்

விழுப்புரம் அருகே மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.மாத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி தனசேகரி (35). இவர்களுக்கு கோகுலபிரியன் (10), சத்யபிரியா(8) என்ற 2 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், தனசேகரிக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், நோய் குணமடைய வில்லை.

மனைவி தீக்குளித்து தற்கொலை… காப்பற்ற முயன்ற கணவரும் பலியான சோகம்!

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனசேகரிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. வலி தாங்க முடியாமல் தவித்த அவர், விரக்தியடைந்து வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், தனசேகரியை காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் தீப்பற்றி எரிந்தது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் காலை தனசேகரி, பாஸ்கர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீக்குளித்த மனைவியை மீட்க சென்று கணவரும் பலியானதால் அவர்களது 2 குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.