தொடர் துன்புறுத்தல்… தாங்க முடியாத வேதனை!-கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி

 

தொடர் துன்புறுத்தல்… தாங்க முடியாத வேதனை!-கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி

குடிபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவனை தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார் மனைவி. இந்த சம்பவம் ஓமலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரியேரிப்பட்டி கிராமம் காட்டூர் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேல். லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு சுமதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மதுவுக்கு அடிமையான சுந்தரவேல், தினமும் போதையில் மனைவி மற்றும் குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று இரவு மனைவியிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார் சுந்தரவேல். இதனால் ஆத்திரம் அடைந்த சுமதி, போதையில் கீழே விழுந்த கணவரின் தலையில் கல்லைப்போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், விரைந்து வந்த சுந்தரவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சுமதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், “லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்த எனது கணவர் வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டுதான் வருவார். குடித்துவிட்டால் அவர் மோசமாக நடந்து கொள்வார். என்னையும், எனது மகள்களையும் அடித்து சித்ரவதை செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரின் கொடுமையை தாங்க முடியவில்லை. கடந்த சனிக்கிழமை குடித்துவிட்டு வந்த அவர், எங்களை அடித்து உதைத்தார். இதனால் ஆவேசத்தில் அவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.