“பதஞ்சலி மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என்றால் தடுப்பூசி எதற்கு?”
பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனாவில் மருந்து அறிமுக விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று கடந்த ஜூன் மாதம் கொரோனில் என்ற மருந்தை பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்தது. இந்த மருந்து அறிவியல் பூர்வமாக சோதனை செய்யப்பட்டதாகவும் பதஞ்சலி தெரிவித்தது. இதனையடுத்து பதஞ்சலி நிறுவனம் கொரோனில் கிட் என்ற பெயரில் மருந்தின் மாதிரியை வெளியிட்டது.
இந்த விழாவில் பாபா ராம்தேவ், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோர் கலந்துகொண்டனர். கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியானது. இந்த செய்திக்கு உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்தது. இந்த சூழலில் பதஞ்சலி மருந்து அறிமுக விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு மருத்துவ சங்கம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பவர் இதுபோன்று தவறான மருந்துகளை வெளியிடுவது சரியா? உலக சுகாதார அமைப்பு நிராகரித்த மருந்தை வெளியிடலாமா? என கேள்வி எழுப்பியது. இது மிகப்பெரிய அவமானம் என தெரிவித்த மருத்துவ சங்கம், கொரோனாவை கொரோனில் மருந்து கட்டுப்படுத்துமானால் அரசு எதற்கு ரூ.35 ஆயிரம் கோடி செலவில் தடுப்பூசி போடுகிறது? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.