`ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’- தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

 

`ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’- தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது ஏன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஓடை புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பது குறித்தும் நான்கு வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், சின்னமானசாவடியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தர்மபுரியை சேர்ந்த கலையரசி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் அதிகளவில் ஆக்கிரமிப்பு நடப்பதாக தினமும் நாளிதழ்களில் செய்தி வருவதாக தெரிவித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது ஏன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

`ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’- தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவு பிறப்பித்தும் ஏன் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீர் ஆதாரங்களை பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், இயற்கை வளங்களை விலைகொடுத்து வளர்ச்சியை பெறக்கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் உள்துறை செயலாளர் பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரை தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்த்தனர். பின்னர், தமிழகத்தில் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பது குறித்தும் நான்கு வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.