டெண்டரே ஒதுக்காத நிலையில் முறைகேடு வழக்கு தொடர்ந்தது ஏன்? – ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்
தஞ்சாவூரில் சாலை விரிவாக்கப் பணிக்கு டெண்டர் நடந்ததாகவும் அதில் முறைகேடு நடந்ததாகவும் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். டெண்டரே ஒதுக்காத நிலையில் முறைகேடு நடந்தது என்று எப்படிக் கூற முடியும் என்று ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 462 கி.மீ தூரத்துக்கு சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள ரூ.1165 கோடியில் டெண்டர் கோரப்பட்டது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைகேடு செய்துவிட்டதாக கூறி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலையில் முதல்வருக்கு வேண்டப்பட்டவருக்கு டெண்டர் வழங்கப்பட்டது என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். டெண்டரில் யாருமே பங்கேற்கவில்லை. யாருமே டெண்டரில் பங்கேற்காத நிலையில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆர்.எஸ்.பாரதி புகார் செய்திருந்தார். அந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றார்.
உடனே நீதிபதி சதீஷ் குமார், “டெண்டரே ஒதுக்காத நிலையில் ஊழல் நடந்தது என்று எப்படிக் கூற முடியும், இந்த வழக்கை திரும்பப்பெறுவதே முறையாக இருக்கும்” என்றார். ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கை 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.