“மடியில கனமில்லைனா ஏன் பயப்படனும்” – எடப்பாடியை குத்திக்காட்டிய தினகரன்!
அண்மையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பாஜக கட்சி தர்மம் என்பதால் வெளிநடப்பு செய்கிறது. இந்த அதிமுகவிற்கு என்ன வந்தது என விவசாயிகளே கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். பேரவையில் அமைச்சர் துரைமுருகனும் ஓபிஎஸ்ஸை வெளுத்து வாங்கினார். வெளிநடப்பு செய்தபின் மீண்டும் பேரவை திரும்பிய ஓபிஎஸ் கண்ணதாசன் வரிகளைச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
“நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு. இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. இதுதான் என் நிலை” என ஓபிஎஸ் கூறினார். தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்தாலும் அதை எதிர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவே அவர் கூறினார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இதன் பொருள் என்னவென்று செய்தியாளர்கள் அவரிடமே கேட்க, அவரோ “ரகசியம் – பரம ரகசியம்” என்று பதிலளித்தார். இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஓபிஎஸ் என்ன அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.
அதேபோல கொடநாடு கொலை வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். எனவே, எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார் தினகரன். தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை அப்படியே தொடர அனுமதிப்பதுதான் பெருந்தன்மையான அரசுக்கு அடையாளம். அதை திமுகவிடம் நாம் எதிர்பார்க்க முடியாது” என்றார்.