இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது யார்! –
ராகுல் எழுப்பும் 3 கேள்விகள்
நம்முடைய எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி சீனா அறிவிப்பு செய்ய அதற்கு அனுமதி அளித்தது யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா இடையே நடந்து வரும் பேச்சு வார்த்தை தொடர்பாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் சீன அறிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் சரியானது என்ற வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீன அரசுகள் வெளியிட்ட அறிக்கை அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
National interest is paramount. GOI’s duty is to protect it.
Then,
1. Why has Status Quo Ante not been insisted on?
2. Why is China allowed to justify the murder of 20 unarmed jawans in our territory?
3. Why is there no mention of the territorial sovereignty of Galwan valley? pic.twitter.com/tlxhl6IG5B— Rahul Gandhi (@RahulGandhi) July 7, 2020
இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “நாட்டின் நலம் மிக முக்கியமான ஒன்று. அதை பாதுகாப்பது இந்திய அரசின் கடமை. அப்படி எனில், எல்லைப் பகுதியில் முன்பு இருந்த நிலை குறித்து வலியுறுத்தாது ஏன்? 20 இந்திய ராணுவ வீரர்கள் இந்திய நிலப்பரப்பில் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிடும் அனுமதியை சீனாவுக்கு அளித்தது யார்? கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் இறையாண்மை பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்?” என்று கேட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதை எழுப்பினாலும் அதை பா.ஜ.க தலைவர்கள் திசை திருப்பிவிடுகின்றனர். இந்திய ராணுவ வீரர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள், அவர்கள் இந்திய எல்லையில் கொல்லப்பட்டார்களா, அல்லது அவர்களை சீனா எல்லைக்குள் அனுப்பியது யார் என்று கேள்வி கேட்டபோது பதில் அளிக்காமல் தேசபக்தி என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு பிரசாரம் செய்தனர். இன்று வரை 20 ராணுவ வீரர்கள் எப்படி தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள் என்று கேள்வி கூட கேட்க முடியாத நிலை உள்ளது. அவர்கள் இறந்ததைப் பற்றி கேள்வி எழுப்பினாலே தேசபக்தி மீது சந்தேகம் எழுப்பிவிடுகின்றனர். தேசபக்தியை வைத்து அனைத்தையும் மறைப்பதற்கு பதில் மக்களுக்கு இப்போதாவது தெளிபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.