இந்துப்பு மட்டுமல்ல… எந்த உப்பையும் அளவோடு பயன்படுத்துங்கள்!

 

இந்துப்பு மட்டுமல்ல… எந்த உப்பையும் அளவோடு பயன்படுத்துங்கள்!

உடல் நலம் காக்கும் நோக்கில் மக்களின் தேடல் பரந்து விரிந்திருக்கிறது. நாம் உண்ணும் உணவில் தொடங்கி அன்றாடச் செயல்பாடுகள் அனைத்திலும் மிக கவனமாக இருக்கிறார்கள். ஆனால், அதீத விழிப்புணர்வின் காரணமாக சிலநேரங்களில் தப்பும் தவறுமாக செய்து நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதும் நடக்கிறது. அந்தவகையில் நாம் அன்றாடச் சமையலில் சேர்த்துக் கொள்ளும் உப்பு விஷயத்தில் அரசாங்கம் உள்பட மாண்புமிகு பொதுஜனமும்கூட தவறுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்துப்பு மட்டுமல்ல… எந்த உப்பையும் அளவோடு பயன்படுத்துங்கள்!
`உப்பு… எந்த உப்பு நல்லது? அந்த உப்பு நல்லதுன்னு சொல்றாங்களே..? இந்துப்பு நல்லதுன்னு கேள்விப்பட்டேன்… அயோடின் சேர்த்த உப்பைத்தான் உணவுல சேர்க்கணும்னு சொல்றாங்களே, அது உண்மையா?’ – இப்படி பல கேள்விகள் எழுகின்றன. சமீபகாலமாக இயற்கை, ஆர்கானிக் விஷயத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு இந்துப்பை அதிகம் பயன்படுத்த வைத்திருக்கிறது. பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படும் அந்த இந்துப்பு பற்றி மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரனிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

`சிறுநீரகம் பழுதானால் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து டயாலிசிஸ் செய்கிறார்கள். செலவு மட்டுமா… டயாலிசிஸ் செய்வதற்குள் அவர்கள் படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல. இதற்கெல்லாம் மாற்றுவழி ஒன்று இருக்கிறது. இந்துப்பை நம்புங்கள்; அன்றாடச் சமையலில் இந்துப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்; 15 முதல் 30 நாளில் செயலிழந்த சிறுநீரகம் இயல்புநிலைக்கு திரும்பும்’ – இப்படிப்பட்ட தகவல்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதேபோல் இன்னொரு தகவலும் பரவுகிறது. அதாவது, மூலம், அல்சர் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் பச்சை மிளகாயை உணவில் தவிர்த்து வரமிளகாயை சேர்த்துக் கொள்வதுபோல, வழக்கமான உணவில் சேர்க்கும் உப்பைத் தவிர்த்து இந்துப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள், நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்’ என்கிறது அந்தத் தகவல்.

அந்தளவுக்கு சக்தி வாய்ந்ததா, இந்துப்பு? என்ற கேள்வியே எல்லோர் மத்தியிலும் எழுகிறது. நாம் காலங்காலமாக அன்றாடச் சமையலில் கல் உப்பு எனப்படும் கல்லுப்பையும், அவற்றைப் பொடியாக்கி அயோடின் சேர்த்து விற்கப்படும் தூள் உப்பு போன்றவற்றையுமே பயன்படுத்தி வருகிறோம். இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை தேடலில் உள்ள சிலர் மட்டுமே இந்துப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இயற்கையாகக் கிடைக்கும் கடல் உப்பில் `அயோடின்’ சேர்க்கப்படுவதில்லை. அந்த உப்பை பயன்படுத்தியவரைக்கும் யாருக்கும் எந்த நலக்கேடும் வந்ததில்லை.

ஆனால், கல்லுப்பு எனப்படும் கடல் உப்பில் இயற்கை தாதுக்கள் அதிகம் உள்ளன. அதைப்போலவே இந்துப்பிலும் உடலுக்குத் தேவையான பல்வேறுவிதமான ஊட்டச் சத்துகளும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. தென்னிந்தியாவின் கடலோரங்களில் கல்லுப்பு பயன்படுத்தப்படுகிறது. கல்லுப்பு கிடைக்காத வட நாட்டின் மலையடிவாரப் பகுதிகளில் வாழும் மக்கள் இந்துப்பு எனப்படும் பாறை உப்பை பயன்படுத்தினர். இன்றைக்கும் வட இந்தியாவில் விரதங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் இந்துப்புதான் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்துப்பு மட்டுமல்ல… எந்த உப்பையும் அளவோடு பயன்படுத்துங்கள்!

இன்று நோய்கள் பல்கிப் பெருக வெள்ளை விஷங்கள் எனப்படும் சில உணவுப்பொருள்களே காரணம் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள். அதில் வெள்ளை நிற தூள் உப்பும் ஒன்று; கல் உப்பல்ல. தூள் உப்பில் கல் உப்பில் உள்ளதைப்போலவே சோடியம் குளோரைடு இருந்தாலும் அது வெள்ளை வெளேர் என பளீர் நிறத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது. கூடவே அயோடின் பற்றாக்குறையால் வரும் ஹைப்போதைராய்டு பிரச்சினையைப் போக்குகிறோம் என்று சொல்லி தூள் உப்பில் அயோடின் சேர்க்கிறார்கள்.

இதுநாள்வரை கடல் உப்பான கல் உப்பைப் பயன்படுத்தி வந்த நமக்கு தூள் உப்பைக் கொடுத்து பயன்படுத்தச் சொல்வதால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. தைராய்டு பிரச்சினை இல்லாதவர்கள் அயோடின் சேர்க்கப்பட்ட தூள் உப்பைச் சாப்பிடுவதால் அவர்களுக்கு வேறுவிதமான நலக்குறைவுகள் ஏற்படலாம் என்பதுபற்றி யாரும் சிந்திக்கவில்லை. மேலும் கடல்நீரிலிருந்து இயற்கையாக உப்பு தயாரித்த முறைகளையெல்லாம் இப்போது கைவிட்டு விட்டனர்.

கடல் நீரிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலுள்ள தாதுக்களை எடுத்து வெள்ளை நிறமாக மாற்ற பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் செயற்கையாக சில தாதுக்களை அவற்றில் சேர்த்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இன்றைக்குக் கிடைக்கும் கல் உப்பு இயற்கைத் தாதுக்கள் இல்லாமலே இப்போது விற்பனைக்கு வருகின்றன.

கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே சோடியம் குளோரைடு உள்ள கல் உப்பைபோல பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பைச் சேர்க்கச் சொல்கிறார்கள். அத்துடன் இந்துப்பில் இயற்கையாகவே அயோடின் சத்து, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண்ணூட்டச்சத்துகள் இருக்கின்றன. இதனால்தான் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் இந்துப்பு சேர்த்துக் கொள்ளலாம் என்கிற குரல் அதிகமாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

80 விதமான தாதுக்களைக் கொண்ட இந்துப்புக்கென சில தனித்துவம் உண்டு. அதுபற்றி அறிந்துகொள்வோம். பாறை உப்பு எனத் தமிழிலும், ஆங்கிலத்தில் ராக் சால்ட் எனவும், இமயமலை உப்பு எனத் தமிழிலும், ஆங்கிலத்தில் ஹிமாலயன் சால்ட் என்ற பெயர்களிலும் இந்துப்பை அழைக்கிறார்கள். இந்தியில் சேந்தா நமக் என்பார்கள். சைந்தவம், சிந்துப்பு, சோமனுப்பு, சந்திரனுப்பு, மதிகூர்மை, சிந்தூரம், மதியுப்பு என பல்வேறு பெயர்களில் இந்துப்பு அழைக்கப்படுவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. பஞ்சாப் மற்றும் இமயமலை அடிவாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இந்துப்பு அதிகளவில் கிடைக்கின்றன. பாறைகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்பை சுத்தமான நீரிலும், இளநீரிலும் ஊற வைத்து பதப்படுத்தி அதன்பிறகே நமக்கு விற்கிறார்கள்.

ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இந்துப்பு மருத்துவக் குணம் நிறைந்தது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு நோய்களுக்கு மலச்சிக்கலே அடிப்படையாக இருக்கிறது. அப்படி நோய்களின் அடிப்படையாக உள்ள மலச்சிக்கலைப் போக்குவதில் இந்துப்பின் பங்கு அதிகம். எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி அதில் பாதி பழத்தின் (வெட்டிய பாகத்தில்) மீது இந்துப்பு தூவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். முக்குற்றம் எனப்படும் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்களின் தன்மைகளை நீக்கி உடலை வலுவாக்கும்.
கல் உப்பு நல்லது என்றாலும் சோடியம் அளவு அதிகரித்தால் இதய நோய் வரலாம். அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு பாதிப்பு வரும். இவற்றையெல்லாம் சரிசெய்ய பொட்டாசியம் குளோரைடு மற்றும் இயற்கையாகவே அயோடின் சத்து உள்ள இந்துப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் ரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன் சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய சுவையின்மை பிரச்சினையைச் சரிசெய்யும். வயதானவர்களை மட்டுமே பாதித்த எலும்புத் தேய்மானம் இன்று எல்லா வயதினரையும் பாதிக்கிறது. எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டி தடுக்கவும் இந்துப்பு பயன்படுத்துவதன்மூலம் தங்களை காத்துக் கொள்ளலாம்.

இந்துப்பு மட்டுமல்ல… எந்த உப்பையும் அளவோடு பயன்படுத்துங்கள்!
உடல் பருமன் பிரச்சினை குழந்தைப்பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. உண்ணும் உணவில் தொடங்கி பல்வேறு நோய்களின் பக்கவிளைவான எல்லா வயதினரையும் பாதிக்கும் உடல்பருமன் பிரச்சினையிலிருந்து காத்துக்கொள்ள இந்துப்பு பயன்படுத்தலாம். மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது இந்துப்பு. உண்ணும் உணவில் தொடங்கி உடலில் ஏற்கெனவே உள்ள சக்தியை ஆற்றலாக மாற்ற பயன்படுத்தும் உயிர் வேதியியல் செயல்முறைகளின் கலவையே வளர்சிதை மாற்றம். இந்தப் பணியைச் சரியாக செய்ய இந்துப்பு உதவும். இதுதவிர செரிமானத்தைத் தூண்டும்; மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்; சீக்கிரம் வயதாவதைத் தள்ளிப்போட உதவும்; சுவாசத்தைச் சீராக்கும்; தசைப்பிடிப்பைக் குறைக்கும்; சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்; சைனஸ் பிரச்சினை வராமல் தடுக்கும். இப்படி பல்வேறு பிரச்சினைகளைத் தடுக்கவும் அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கவும் உதவுகிறது.
`சிறுநீரகச் செயலிழப்பை இந்துப்பு போக்கும்’ என்ற செய்தி முகநூல், வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு இணையங்களில் பரவலாக பரப்பப்படுகிறது. உண்மையிலேயே இந்துப்புக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. சோடியம் நம் உடலில் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியமான நுண்ணூட்டச்சத்தாகும். சிறுநீரகம் செயலிழந்த பலருக்கு சோடியம் குளோரைடின் அளவு அதிகரித்திருக்கும். அதேவேளையில் பொட்டாசியம் குளோரைடு குறைவாக இருக்கும். சிலருக்கு பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டவர்களுக்கு சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்திருந்தால் கல் உப்பைத் தவிர்த்து இந்துப்பைப் பயன்படுத்தலாம். பொட்டாசியத்தின் அளவு ஓரளவு அதிகரித்ததும் கல் உப்பு, இந்துப்பு என மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். மற்றபடி இந்துப்பு பயன்படுத்தியதால் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக சொல்லப்படும் தகவல்கள் உண்மையல்ல. ஆனாலும், முழுமையாக இந்துப்புக்கு மாறுவதும் சரியல்ல” என்று சொன்ன தமிழ்க்குமரன் இறுதியில்,`இந்துப்பு மட்டுமில்லை, எந்த உப்பாக இருந்தாலும் அதை அளவோடு பயன்படுத்துவதே நல்லது’ என்றார்.