இறந்த நபர்களின் ஆதார் என்னவாகும்? மத்திய அரசு விளக்கம்
மறைந்த நபர்களின் ஆதார் எண்ணை செயலிழக்க செய்வதற்கான வழிவகைகள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
சுமார் 10 வருடங்களுக்கு முன் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, அடையாளமாக இருந்தது குடும்ப அட்டைதான். தற்போது அந்த இடத்தை ஆதார் அட்டை பிடித்துள்ளது. ஆதார்- குடும்ப அட்டை இணைப்பு, ஆதார்- பான் எண் இணைப்பு, ஆதார்- அடையாள அட்டை இணைப்பு என மோடி தலைமையிலான அரசு ஆதார் அட்டைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது. வேலைக்கு சேருவதில் தொடங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வரை ஆதார் மிகமிக அவசியமாகவுள்ளது. இதனிடையே ஆதார் அட்டையிலிருந்து தனிநபர்களின் தகவல்கள் கசிவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் மக்களவையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்து மூலம் அளித்த பதிலில், பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொண்ட பின்னரே, இறந்த நபர்களின் ஆதார் எண்ணை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மறைந்த நபர்களின் ஆதார் எண்ணை செயலிழக்க செய்வதற்கான வழிவகைகள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.