தினமும் பீர் குடித்தால் என்ன பிரச்னை எல்லாம் வரும் தெரியுமா?

 

தினமும் பீர் குடித்தால் என்ன பிரச்னை எல்லாம் வரும் தெரியுமா?

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் கூட பீர் அருந்தினால் உடல் எடை அதிகரிக்கும், சிறுநீரக கல் பிரச்னைக்கு நல்லது என்ற தவறான கருத்து பலரிடமும் உள்ளது. எனவே, பலரும் பீர் குடிப்பதை மது வகையில் சேர்ப்பதே இல்லை. மது பழக்கம் இல்லை, எப்போதாவது பீர் குடிப்பேன் என்று அறியாமையால் சொல்வதும் உண்டு.

மற்ற மது வகைகளைக் காட்டிலும் பீரில் குறைவான அளவு ஆல்கஹால் உள்ளது. அதனால் மற்ற மது வகைகளைக் காட்டிலும் பீர் நல்லது என்ற எண்ணம் குடிப்பவர்கள் மனதில் தோன்றியிருக்கும் போல. பீரில் சில மருத்துவ தன்மைகள் இருக்கின்றன. இருப்பினும் அதை எல்லாம் விட உடலுக்கு கேடு விளைவிக்கும் தன்மையே அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

தினமும் பீர் குடித்தால் என்ன பிரச்னை எல்லாம் வரும் தெரியுமா?

தினமும் பீர் அருந்துவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி இங்கே காண்போம்.

1) தொப்பை விழும்

பீரில் அதிக அளவில் கலோரி உள்ளதால் உடல் எடை அதிகரிக்கும். அதன் முதல் கட்டமாக தொப்பை ஏற்படும். ஏற்கனவே நாம் சாப்பிடும் உணவில் அதிக அளவில் கலோரி உள்ளது. இதனுடன் பீர் கலோரியும் சேரும்போது அது பாதிப்பையே ஏற்படுத்தும்.

2) இதயத்துக்கு நல்லது இல்லை

மிகச் சிறிய அளவில் பீர் அருந்துவது இதயத்துக்கு நல்லது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் ஊரில் யாரும் மருந்து போல ஸ்பூனில் பீர் அருந்துவது இல்லை. அளவுக்கு மிஞ்சும் போது அது இதய தசைகளை பாதிப்படையச் செய்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. கலோரியும் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை விரைவுபடுத்தும். பீர் அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் மிக விரைவாக அதிகரிப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. இது இதயம், சிறுநீரகத்தைப் பாதிக்கலாம்.

3) சிறுநீரகம் பாதிக்கப்படும்

ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது அதனால் பாதிக்கப்படுவது சிறுநீரகங்கள்தான். மேலும் பீர் சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. இதனால், சிறுநீரகங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், உடலில் நீர் இழப்பு, எலக்ட்ரோல் சமநிலை பாதிப்பு என்று பல பிரச்னைகள் வரலாம். சிறுநீரகத்தைப் பாதிக்கச் செய்து சிறுநீரக கல், சிறுநீரக செயல் இழப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

4) ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தும்

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயங்க சில வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் அவசியம். மது அருந்தும்போது, அது நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடலுக்குக் கிடைக்க வேண்டிய பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் கிடைப்பதை தடுக்கிறது. சில ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவதைத் தடுத்து, வீணாக வெளியேற்றச் செய்துவிடுகிறது. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. உடல் உள் உறுப்புக்கள் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

தினமும் பீர் குடித்தால் என்ன பிரச்னை எல்லாம் வரும் தெரியுமா?

5) தூக்கத்தைக் கெடுக்கிறது

மது அருந்தினால் நன்றாக தூங்குவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், அது நீண்ட, ஆழமான தூக்கமாக இருக்காது என்கிறது ஆய்வுகள். ரேப்பிட் ஐ மூமெண்ட் என்பதுதான் நம்முடைய தூக்கத்தின் முக்கியமான பகுதி. ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றால்தான் தூக்கத்தின் உச்சமாக 90 நிமிடங்களுக்கு ரேப்பிட் ஐ மூமெண்ட் இருக்கும். இந்த உச்ச நிலைக்கு செல்வதை ஆல்கஹால் தடுத்துவிடுகிறது. இதனால், அடுத்த நாள் காலையில் சோர்வு, கவனக்குறைவு, தூங்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆல்கஹால் ஒருவரின் தூக்கம் மற்றும் மனநலனை பாதிக்கும். எனவே இதெல்லாம் தேவையா என்பதை அடுத்த முறை மது அருந்தும் முன் யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.