’’வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்பிட்டிருக்கோம்…’’-அமைச்சர் ஜெயக்குமாருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

 

’’வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்பிட்டிருக்கோம்…’’-அமைச்சர் ஜெயக்குமாருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் எட்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்ததற்காக பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த வந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு பரபரப்பு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு மாணவர்கள் பேசக்கூடாது என நினைக்கிறீர்கள்? தி.க., தி.மு.க போல் ஏன் அதிமுக செயல்படுகிறது? முதலில் உங்கள் கட்சியில் உள்ள கொடியில் அண்ணா படத்தை தூக்குங்கள், கட்சிப் பெயரிலும் அண்ணா என்ற வார்த்தையை தூக்கிவிட்டு அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று வைத்துக்கொள்ளுங்கள்’’என்று கூறியிருந்தார்.

முதல்வரையே மிரட்டுவதாகவும் அவரது பேச்சு இருந்தது. ‘’ஆட்சி முடியப்போகிறது என இப்படி பேசுகிறீர்களா, அடுத்து ஆட்சிக்கு வருபவர்களால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா, இப்போது ஆட்சியில் உள்ள கட்சியை நினைத்துப் பாருங்கள், உங்கள் பைல்கள் அவர்களிடம் இருக்கிறது”என்று பேசியிருந்தார்.

’’வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்பிட்டிருக்கோம்…’’-அமைச்சர் ஜெயக்குமாருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ’’ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இவர் எந்தக் கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார் அ.தி.மு.க. கொடி. அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான, ரோஷம், சூடு இருந்தால் அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்ப கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன், இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்ப கொடுத்திட வேண்டும். எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் வருகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கு அவரை பதில் சொல்ல சொல்லுங்கள்’’என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக, எஸ்.வி.சேகர் மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘’மான ரோஷம் இருந்தால் ஐந்து வருட பணத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்கிறார். நான் ஒரு பைசாக் கூட அ.தி.மு.க.வில் இருந்து வாங்கவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக இருந்து, நேர்மையாக உழைத்து, ஒரு பைசாக் கூட கமிசன் வாங்காமல் இருந்து, அரசு கொடுக்கக் கூடிய பணத்தை ஓய்வூதியமாக வாங்கிக்கொள்கிறேன். அதில் என்ன தப்பு இருக்கிறது. நான் எங்காவது ஒரு பைசா கமிசன் வாங்கியிருக்கிறேன் எனத் தெரியுமா? நாம எல்லோருமே பக்கத்து பக்கத்து பென்ச்சில உட்கார்ந்து வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்பிட்டிருக்கோம். அவ்ளோ விரோதியா… என்னைப் பார்த்து வெட்கம், மானம், ரோசம் இருக்கான்னு கேட்க வேண்டிய அவசியமே இல்லையே.

ஜெயக்குமார்! உங்களை நான் நல்ல நண்பராகத்தான் பார்க்கிறேன். நான் சொன்னது, இந்த அ.தி.மு.க. தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்ட கருத்தே தவிர வேறு ஒன்றுமே கிடையாது. எப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை அ.தி.மு.க.வில் கடைப்பிடிக்க ஆரம்பித்தீர்களோ, எப்போது எம்.ஜி.ஆர். எப்போ மூகாம்பிகை கோயிலுக்குப்போய் வைரவால் சாத்திட்டு வந்தாரோ, எப்போது ஜெயலலிதா எல்லா கோயிலுக்கும் போய் ஆமாம் நான் ஆன்மீகவாதி என்று உரக்கச் சொன்னார்களோ, அப்பவே நீங்கள் கொண்டாடுகின்ற அண்ணா கொள்கையும், ஈ.வே.ரா. கொள்கையும் புதைக்கப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியும். ஆனால் நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’’என்று பதிலடி தந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

’’நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. சசிகலாவை சந்தித்தது இல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத்தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு… நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா?’’என்றும் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.