மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
தேனி
தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளார் அணை அமைந்துள்ளது. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது.
இதனால், மூழையாறு, தலையாறு உள்ளிட்ட துணை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதிகபட்சமாக கடந்த 19ஆம் தேதி அன்று வினாடிக்கு 325 கனஅடி நீர் வந்தது. இதனால், 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இந்த நிலையில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று மஞ்சளாறு அணையில் இருந்து இன்று வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
இதனையொட்டி, நடந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கலந்துகொண்டு, தண்ணீரை திறந்துவைத்தார். நீர்திறப்பு காரணமாக தேனி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 148 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 111 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், வருவாய்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.