காவிரிக்கு நீர் வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு!
Oct 18, 2020, 09:02 IST1602991930000
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், காவிரிக்கு நீர் வரத்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கவிருப்பதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில், காவிரி ஆற்றின் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே.எஸ்.சாகர் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றுக்கு நீர் அதிகமாக திறக்கப்படுகிறது. நேற்று காவிரிக்கு நீர் வரத்து 9000 கன அடியாக இருந்த நிலையில், இன்று 10,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மழை தொடரும் பட்சத்தில், நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.